ஹார்மூஸ் ஜலசந்தி மீண்டும் முற்றுகை: டிரம்ப் அறிவிப்பால் பதற்றம்

ஈரானின் கடல் மற்றும் வான் படைகள், ஏவுகணை மற்றும் டிரோன் உற்பத்தி உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை தகர்த்திருக்கிறோம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
டிரம்ப்
Published on

வாஷிங்டன் டி.சி.

ஹார்மூஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை மீண்டும் முற்றுகையிடும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அதிகரித்து வரும் மோதலால் மேற்காசிய பகுதியில் பதற்றம் கூடியுள்ளது. இதன்படி, ஈரானுக்கு எதிராக புதிய ராணுவ தாக்குதல்களை அமெரிக்கா அதிகரித்து உள்ளது.

ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை எளிதில் கடந்து செல்லும் வகையில், வர்த்தக கப்பல்களின் போக்குவரத்து பாதுகாப்பிற்காகவும் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் ஈரானுக்கு எதிராக அதிகளவிலான தாக்குதல்களை அமெரிக்க படை தொடங்கியுள்ளது என அந்நாடு தெரிவித்து உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஈரானிய படைகளின் திறனை குறைக்கும் வகையில், அமெரிக்க பாதுகாப்பு படை தளபதியின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இதன்படி, ஈரானின் தெற்கு நகரங்களான ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய 3 முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

வர்த்தக கப்பல் தாக்குதல்

ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல் ஒன்றை ஈரான் தாக்கியதற்கு பொறுப்பேற்க செய்யும் வகையில் ஈரானிய படைகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இந்த பரபரப்பான சூழலில், ஈரானை இலக்காக வைத்து, ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கடற்படை மீண்டும் முற்றுகையிடும் என டிரம்ப் அறிவித்து உள்ளார்.

நாங்கள் ஈரானை மிக கடுமையாக தாக்கி வருகிறோம். எங்களிடம் அதிக அளவில் வெடிபொருட்கள் உள்ளன. ஈரானை கடுமையாக தாக்கி வருகிறோம். அது தொடரும். என்ன நடக்க போகிறது என்று பார்ப்போம்.

மீண்டும் முற்றுகை

அவர்களுடைய தாக்குதலுக்கான திறன் கொண்ட எல்லாவற்றையும் நாங்கள் தாக்கி வருகிறோம். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியை நாங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். நாங்கள் மீண்டும் முற்றுகையிடுவோம். ஈரானுக்கு எதிரான முற்றுகையாக அது இருக்கும். வேறு யாருக்கும் அல்ல. அதேபோன்று, ஈரானுடன் வர்த்தகம் செய்யக்கூடியவர்களும் இந்த வழியை கடந்து செல்ல முடியாது. அவர்கள் தவிர, மற்றவர்கள் செல்ல முடியும்.

ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களை விட இந்த முற்றுகையானது திறன் வாய்ந்து இருக்கும். ஆனால், இந்த இரண்டும் சேர்ந்தே செயல்படுத்தப்படும் என்றே நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஈரானின் கடல் மற்றும் வான் படைகள், ஏவுகணை மற்றும் டிரோன் உற்பத்தி உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வெகுவாக தகர்த்திருக்கிறோம் என்றும் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை பற்றி அவர் குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com