

ஈரான் அனு ஆயுத தயாரிப்பில் ஈடுபட முயல்வதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்குதல் நடத்தினர். ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் கோபம் அடைந்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. மேலும் உலக எண்ணெய் வர்த்தகத்தின் இதயம் போல திகழும் ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது.
இதனால், சர்வதேச அளவில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்கு கொண்டு வர பல கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இன்னும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இந்த நிலையில், அணு ஆயுத விவகாரத்தில் ஒப்பந்தம் இல்லாமலே போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிகாரிகள் கூறிய தகவல்களை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியிருப்பதாவது; டிரம்ப் கடந்த சில வாரங்களாக போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறார். குறிப்பாக, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டால் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அவர் தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது.
உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எண்ணெய் விலை, எரிபொருள் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு குறித்த கவலை அதிகரித்துள்ளது. இதற்கிடையே, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க அமெரிக்காவிடம் ஈரான் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும், ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டால், ஈரான்-அமெரிக்கா இடையிலான நீண்டகால மோதலுக்கு முடிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது