ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; பள்ளி குழந்தைகள் உள்பட 18 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பள்ளி குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; பள்ளி குழந்தைகள் உள்பட 18 பேர் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் மேற்கு காபூல் நகருக்கு அருகே ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் தஷ்த் இ பர்ச்சி பகுதியில் கல்வி மையம் ஒன்றின் வெளியே தற்கொலைப்படையை சேர்ந்த நபர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பள்ளி குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 57 பேர் காயமடைந்துள்ளனர்.

கல்வி மையத்திற்குள் நுழைய முயன்ற நபரை பாதுகாவலர்கள் தடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து வெடிகுண்டை வெடிக்க செய்து அந்நபர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார்.

இதில் கொல்லப்பட்டவர்களை தவிர்த்து காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களை உறவினர்கள் தேடி கண்டறியும் சூழலில் உள்ளனர். பலி எண்ணிக்கை உயர கூடும் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தலீபான் அமைப்பு தெரிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர கத்தார் தலைநகர் தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

அந்நாட்டில் அல் கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இதுபோன்று, கல்வி மையம் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கடந்த காலத்தில் ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டில் கல்வி மையம் மீது நடந்த தாக்குதலில் 34 பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டனர். அந்நாட்டில், சிறுபான்மையின ஷியா பிரிவினர், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகியோரை இலக்காக கொண்டு ஐ.எஸ். அமைப்பு பெருமளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com