

பாகிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த மாத இறுதியில் அவர்கள் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் பலியாகினர்.
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு எதிராக பாகிஸ்தானின் வட பகுதி எல்லையில் கடந்த மாதத்தில் ராணுவ நடவடிக்கை தொடங்கியது.
இந்த நிலையில், அந்த பகுதியில் தீவிரவாதிகள் உள்ள தகவல் ராணுவ அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து நேற்றிரவு தீவிரவாத தேடுதல் வேட்டை தொடங்கியது.
அவர்களை நோக்கி தீவிரவாதிகளில் ஒருவன் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளான். இதில், ஒரு ராணுவ அதிகாரி உள்பட 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்நாட்டின் பிரதமராக ஷாகித் கக்கான் அப்பாசி பொறுப்பேற்று ஒரு வாரத்திற்குள்ளாக 2வது முறையாக தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு அப்பாசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.