நாட்டை விட்டு வெளியேறும் குடியேறிகளுக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி - சுவீடன் அரசு அறிவிப்பு

சுவீடனில் குடியேறிய வெளிநாட்டவர்கள் பலர், தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல தங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
நாட்டை விட்டு வெளியேறும் குடியேறிகளுக்கு ரூ.35 லட்சம் நிதியுதவி - சுவீடன் அரசு அறிவிப்பு
Published on

ஸ்டாக்ஹோம்,

சுவீடனில் குடியேறிய வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பினால், அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

புதிய திட்டம்

ஒரு காலத்தில் அகதிகளையும் புலம் பெயர்ந்தவர்களையும் வரவேற்ற சுவீடன் நாடு, தற்போது தனது குடியேற்றக் கொள்கையில் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. நடப்பு செப்டம்பர் மாத பொதுத்தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், அங்குள்ள ஆளும் கூட்டணி அரசு புதிய அதிரடித் திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.

நிதியுதவி

இதன்படி, ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே இருந்து வந்து சுவீடனில் குடியேறிய வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பினால், அவர்களுக்கு சுமார் ரூ.35 லட்சம்(3,50,000 சுவீடிஷ் குரோனா) நிதியுதவி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்காக சுமார் ரூ.1,300 கோடி(1.3 பில்லியன் குரோனா) நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

இது மட்டுமின்றி, சுவீடன் நாட்டில் குடியேறுபவர்களுக்கான பிற விதிமுறைகளையும் அந்நாட்டு அரசு கடுமையாக்க தொடங்கியுள்ளது. அதன்படி சுவீடனில் வசிப்பதற்கு இனி நிரந்தர அனுமதிகள் வழங்கப்பட மாட்டாது என்பதோடு, ஏற்கனவே பெற்றப்பட்ட அனுமதியை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

விருப்பம் இல்லை

சுவீடன் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. சுவீடனில் குடியேறிய வெளிநாட்டவர்கள் பலர், தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல தங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். சூடான் நாட்டில் இருந்து சுவீடனில் குடியேறிய எலேனா இப்ராஹிம்(வயது 42) என்ற பெண் கூறுகையில், “எனக்கு சுதந்திரம் வேண்டும். நான் எனது உழைப்பில், நிம்மதியான வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன். நான் திரும்பிச் செல்ல மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

இதே போல் உக்ரைன், ஆப்கானிஸ்தான் உள்பட போரால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் சுவீடனில் குடியேறியுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை சுவீடன் அரசின் நிதியுதவியை பெற்று நாட்டை விட்டு வெளியேறுவதில் தங்களுக்கு சிறிதும் விருப்பமில்லை என உறுதியாக கூறுகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com