

கீவ்,
உக்ரைன்-ரஷியா இடையிலான போர் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்பும் திட்டமில்லை என அமெரிக்காவும், நேட்டோ கூட்டமைப்பும் கூறிய நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் நேட்டோ கூட்டமைப்பில் உள்ள சில நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தன. ஒரு சில நேட்டோ நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றன. ஆனால் நேரடியாக எந்த நாடும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளையோ, படைகளையோ அனுப்பவில்லை.
இந்த நிலையில் ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்திருப்பதாக செலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.