

காபூல்,
ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தலீபான் பயங்கரவாத அமைப்பு 16 வருடங்களாக போரில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்பு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அரசின் நிலை தன்மையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டது. இதனால் தலீபான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வந்துள்ளது.
எனினும் அந்நாட்டில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில், காபூல் நகரில் இன்று காலை 9.10 மணியளவில் வெடிகுண்டு வைக்கப்பட்ட கார் ஒன்று தற்கொலைப்படை பயங்கரவாதியால் வெடிக்கச்செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் பொதுமக்களில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். பொதுமக்கள் அதிக அளவில் பணிக்கு செல்லும் நேரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது.
இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆப்கான் அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தலீபான்கள் அமைப்பு இந்த தற்கொலைப்படை தாக்குதலை முன்னெடுத்து உள்ளது. ஆப்கான் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தலீபான் பயங்கரவாத இயக்கமும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமும் தொடர்ச்சியாக காபூலில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மார்ச் 9 ஆம் தேதி ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில், 9 பேர் பலியாகினர்.