

லண்டன்,
இங்கிலாந்தில் இந்திய மாணவன் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கமாரெட்டி மாவட்டம் தலமட்லா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஸ்ரீநாத் (வயது 25). இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தார். கடந்த ஓராண்டுக்குமுன் லண்டன் சென்ற ஸ்ரீநாத் அங்கு விடுதியில் தங்கி கல்வி பயின்று வந்தார்.
இந்நிலையில், விடுதியில் தங்கி இருந்த ஸ்ரீநாத் கடந்த 22ம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார். பிறந்தநாள் விழா ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீநாத் அன்று இரவு விடுதியில் உள்ள தனது அறையில் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, ஸ்ரீநாத்தின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.