

தீப்பிடித்து எரிந்த கப்பல்
ராசல் கைமாவின் அல் ஜசீரா துறைமுகம் வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கப்பல்கள் அதிக அளவில் வந்து செல்லும் முக்கிய மையமாக இந்த துறைமுகம் இருந்து வருகிறது.இந்த துறைமுகத்தில் பராமரிப்பு பணிகளுக்காக கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 11.30 மணியளவில் திடீரென்று கப்பலின் கேபின் ஒன்றில் தீப்பிடித்தது. சற்று நேரத்தில் மள, மளவென தீ பரவி கப்பல் முழுவதும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
4 மணி நேரம் போராட்டம்
இது பற்றி தகவல் அறிந்து 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்க நீண்ட நேரம் போராடினர். கிரேன் மூலம் நாலாபுறமும் தண்ணீரை பீய்ச்சி அடித்து நள்ளிரவு 1.20 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிறகு விடிய விடிய நெருப்பை அணைக்கும் பணி நடைபெற்றது.முழுமையாக நேற்று அதிகாலை 4 மணிக்கு தீயை அணைத்தனர். 4 மணி நேரம் தீயணைப்புப்படை வீரர்கள் போராடி தீயை அணைத்தது குறிப்பிடத்தக்கது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ராசல் கைமா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.