நைஜர் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்; 2 இந்தியர்கள் உயிரிழப்பு, ஒருவர் கடத்தல்

கடத்திச் செல்லப்பட்ட இந்தியரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நைஜர் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்; 2 இந்தியர்கள் உயிரிழப்பு, ஒருவர் கடத்தல்
Published on

நியாமி,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜரின் தலைநகரான நியாமியில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் டாசோ என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தை சுற்றி ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது கடந்த 15-ந்தேதி பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்த நிலையில், இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலின்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் மற்றொரு இந்தியரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நைஜரில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடத்திச் செல்லப்பட்ட இந்தியரை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் விரைவில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நைஜரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com