

மொகாதிசு,
சோமாலியாவில் அல் கொய்தாவுடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு ராணுவ வீரர்கள் போலீசார் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க சோமாலியா ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.
இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் மொகாதிசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு மிக அருகில் பிரபலமான ஐஸ் கிரீம் பார்லர் உள்ளது. இங்கு நேற்று காலை ஏராளமான வாடிக்கையாளர்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்த பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.
விமான நிலையத்துக்கு மிக அருகில் நடந்த இந்த குண்டு வெடிப்பால் விமான நிலையத்தில் பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. இதையடுத்து உடனடியாக அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே இந்த தற்கொலைப்படை தாக்குதலில் எத்தியோப்பியா நாட்டின் தூதரக ஊழியர் ஒருவர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அல் ஷபாப் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தி இருப்பார்கள் என சோமாலியா அரசு குற்றம் சாட்டியுள்ளது.