பலூசிஸ்தானில் பயங்கரவாத ஒழிப்பு வேட்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
பலூசிஸ்தான்,
பாகிஸ்தான் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட மாகாணங்களில் ஒன்றாக பலூசிஸ்தான் இருந்து வருகிறது. பல தசாப்தங்களாக விடுதலை கோரி பலூசிஸ்தான் மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் பலன் கிட்டாத சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிராக ஊடுருவல்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் பொதுமக்களுக்கு எதிராகவும் வன்முறை மற்றும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதத்தில் பாகிஸ்தானிய ராணுவத்தினருக்கு எதிராக நடந்த 2 பயங்கரவாத தாக்குதலில், 4 வீரர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து பலூசிஸ்தானின் காரன் மாவட்டத்தில் ஹல்மெர்க் பகுதியில், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் நேற்று ஈடுபட்டனர். இந்த பயங்கரவாத ஒழிப்பு வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானிய ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

