

பாங்காக்,
தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா. இவர் தனது ஆட்சியின்பொழுது அரிசி மானிய கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதன் தலைவராகவும் அவர் இருந்த நிலையில் அந்த திட்டம் தோல்வி அடைந்தது. விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படாததுடன் இவரது அமைச்சரவையின் 2 அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவ கிளர்ச்சியை அடுத்து அவரது அரசு கவிழ்க்கப்பட்டது.
இந்நிலையில், ஷினவத்ரா கடந்த மாதம் நாட்டை விட்டு தப்பியோடினார். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் நேற்று வழங்கிய தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட யிங்லக் ஷினவத்ரா குற்றம் செய்துள்ளார் என இந்நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. எனவே, அவருக்கு இந்த நீதிமன்றம் 5 வருட சிறை தண்டனை விதிக்கின்றது என தெரிவித்தனர்.
இந்நிலையில் தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓச்சா செய்தியாளர்களின் கேள்விக்கு அளித்த பதிலில், முதற்கட்ட புலனாய்வு விசாரணையின்படி ஷினவத்ரா மத்தியகிழக்கு நாடுகளின் வர்த்தக மையம் ஆக திகழும் துபாயில் இருக்கிறார் என கூறியுள்ளார்.
இந்த தகவல் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் தயாரித்த முதற்கட்ட தகவல் அறிக்கையின்படி வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். துபாயில் உள்ள அதிகாரிகள் இதற்கு உடனடி பதில் எதுவும் தரவில்லை.