

பிரேசிலியா,
தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் அதிபராக இருப்பவர் ஜேர் பொல்சனேரோ (வயது 65). அந்நாட்டில் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டு அதிபர் பொல்சனேரோவுக்கு கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனால், தனது வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொள்ள அலுவலகம் வராமல் தவிர்த்தார். தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை அதிபர் தொலைக்காட்சி வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஒரு வாரம் வரை அவர் தனிமைப்படுத்துதலில் இருந்து வருகிறார்.
அவர் வசித்து வரும் அதிபர் இல்லத்தில் பெரிய உருவம் கொண்ட ரியா பறவைகள் உள்ளன. இவை நெருப்பு கோழி இனத்துடன் சேர்ந்தவை. அதிக நேரம் தனிமையாக இருப்பதில் சலிப்பு தட்டியதில் பொல்சனேரோ, பறவைகளுக்கு தீனி கொடுத்துள்ளார். இதில் ஒரு பறவை உணவு உண்ணும்பொழுது, அவரது கையை கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த அவர் கையை உதறியுள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.