

லாகூர்,
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் சுதந்திர தினம் கடந்த 14ந்தேதி கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த பெண் டிக்டாக்கில் பிரபலம். அவர் விதவிதமாக வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிடுவது வழக்கம். இதனால் ஏராளமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். அந்த கொண்டாட்டத்தை படம்பிடிப்பதற்காக, தனது நண்பர்கள் 6 பேருடன் மினார் -இ -பாகிஸ்தான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார்.
லாகூரின் இக்பால் பார்க் அருகே வந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். பின்னர் அவர்களை விரட்டினர். இதனால் செய்வதறியாது திகைத்த டிக்டாக் பிரபலம் தப்பிக்க ஓடினார். ஆனால், அந்த கும்பலில் சிலர் அவர் உடைகளை கிழித்தனர். அவரை அங்கும் இங்குமாக தள்ளினர். தரதரவென இழுத்தனர். மேலே தூக்கி வீசினர் இருந்தாலும் அதில் இருந்த சிலர், அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களாலும் முடியவில்லை.
இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது வைரலானதை அடுத்து பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
400 பேர் கொண்ட கும்பல் தன்னையும், தன் நண்பர்களையும் கடுமையாக தாக்கி, உடைகளை கிழித்து இழுத்து சென்று, அணிந்திருந்த நகைகளையும் நண்பரின் செல்போன், ரூ.15 ஆயிரத்தை பறித்து கொண்டனர் என்றும் அந்த டிக்டாக் பிரபலம் லாகூர் லாரிஅட்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். லாகூர் டி.ஐ.ஜி. சஜித் கிய்வானி இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் பற்றிய வீடியோ வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதில், பரபரப்பு நிறைந்த சாலையில் திறந்த நிலையிலான ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அதில் 2 பெண்கள் நடுவே குழந்தை ஒன்றை வைத்து கொண்டு அமர்ந்துள்ளனர்.
அதனையொட்டி மோட்டார் சைக்கிள் ஒன்று வருகிறது. அதில் இருந்த ஒரு நபர் திடீரென ரிக்ஷாவில் தொற்றி கொள்கிறார். இதனால் அந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் ஒரு பெண்ணின் கன்னத்தில் முத்தமிடுகிறார்.
இதனால் அந்த பெண்கள் அலறி கூச்சலிடுகின்றனர். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆத்திரத்தில் பெண்களில் ஒருவர் செருப்பு ஒன்றை கழற்றி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நோக்கி அடிக்க முற்படுகிறார். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் ரிக்ஷாவில் இருந்து இறங்கி செல்ல முற்படுகிறார். எனினும், அருகேயிருந்த மற்றொரு பெண் அவரை தடுத்து அமர வைக்கிறார்.
அந்த ரிக்ஷாவை சுற்றி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் என ஆண்கள் பலர் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்கள் கைகளில் தேசிய கொடியுடன் காணப்பட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.