ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்கில் திரையிட முடிவு

ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்வை நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்கில் திரையிட முடிவு
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் சடங்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மட்டுமின்றி பூங்காக்கள், சதுரங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் சடங்கு நிகழ்வுக்கான காட்சிகளை காண்பிக்க திரைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் என சினிமா சங்கம் அறிவித்துள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை மூலம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்படும் என்று கலாச்சாரத் துறை அறிவித்துள்ளது.

1997-ல் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்குகள், 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் அரச திருமணங்கள் உள்பட சமீபத்திய பிரிட்டிஷ் வரலாற்றின் பிற முக்கிய நிகழ்வுகளை விட கூட்டம் அதிகம் இருக்கும் எனவும் இறுதிச்சடங்கிற்கு அரசாங்கம் பொது விடுமுறையை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com