‘டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ - சீன அதிபரின் பேச்சு.. அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா?

சீனாவும், இந்தியாவும் பழம்பெரும் நாகரிகங்களைக் கொண்ட நாடுகள் என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
பீஜிங்,
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷியா, இந்திய உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல், பொருளாதாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பு கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்தன. இந்த அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகளில் நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். தனி விமானம் மூலம் சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது பேசிய சீன அதிபர் ஜின்பிங், “சீனாவும், இந்தியாவும் பழம்பெரும் நாகரிகங்களைக் கொண்ட கிழக்கத்திய நாடுகள். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகள். மேலும் சர்வதேச தெற்கு பிராந்தியத்தின் முக்கிய உறுப்பினர்கள்.
நமது இரு நாட்டு மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல், ஒற்றுமை மற்றும் புத்துணர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் மனித சமூகத்தின் முன்னேற்றத்தை ஊக்குவித்தல் ஆகிய வரலாற்றுப் பொறுப்பை நாங்கள் இருவரும் சுமக்கிறோம்.
நாம் சிறந்த அண்டை நாட்டு நட்புறவுகளைக் கொண்ட நண்பர்களாகவும், ஒருவருக்கொருவர் வெற்றியை பெற வைக்கும் கூட்டாளிகளாகவும் இருக்க வேண்டும். டிராகனும், யானையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வரிவிதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது சீன அதிபர் இவ்வாறு பேசியிருப்பது அமெரிக்காவுக்கு அவர் விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.






