நைஜீரிய அதிபர் கலந்துகொண்ட தேர்தல் பேரணியில் நெரிசல்; 14 பேர் பலி

நைஜீரியாவில் அதிபர் கலந்துகொண்ட தேர்தல் பேரணியில் நெரிசல் ஏற்பட்டு 14 பேர் பலியாகினர்.
நைஜீரிய அதிபர் கலந்துகொண்ட தேர்தல் பேரணியில் நெரிசல்; 14 பேர் பலி
Published on

அபுஜா,

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மிகப்பெரிய நாடு நைஜீரியா. ஆப்பிரிக்காவில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட 7-வது நாடாகவும் நைஜீரியா விளங்குகிறது.

இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் முகமது புகாரி அதிபராக உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையொட்டி அங்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) பொதுத்தேர்தல் நடக்கிறது.

இதில் தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவிக்கு முகமது புகாரி போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து, முன்னாள் துணை அதிபர் அட்டிகு அபுபக்கர் களம் இறங்கி உள்ளார். இந்த தேர்தலில் இருவருக்கும் பலத்த போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்காக இருவரும் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ரிவர்ஸ் மாகாணத்தின் தலைநகர் ஹார்ட்கோர்டில் அதிபர் முகமது புகாரியின் அனைத்து முற்போக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரமாண்ட தேர்தல் பேரணி நடைபெற்றது.

இதற்காக அங்குள்ள ஒரு மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அப்போது அங்கு வந்த முகமது புகாரி, மக்கள் மத்தியில் நீண்ட உரையாற்றினார்.

பின்னர் அவர் தனது உரையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். அதனை தொடர்ந்து அதிபரை பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றனர்.

இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். அவர்களை கவனிக்காமல் மக்கள் ஓடியதால், காலில் மிதிபட்டு நிலைகுலைந்துபோயினர். சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு சுருண்டு விழுந்தனர்.

இப்படி இந்த கோர சம்பவத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த துயர சம்பவம் குறித்து அறிந்து அதிபர் மிகவும் மன வருத்தம் அடைந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com