

ஹாங்காங்,
ஹாங்காங், சீன நாட்டின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. 1997ம் ஆண்டு வரை ஹாங்காங், பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் சீனாவின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹாங்காங்கில் வழக்குகளில் சிக்குவோரை சீனாவுக்கு நாடு கடத்தி அங்கு விசாரணையை சந்திக்க வைக்க முயற்சி நடக்கிறது. இதற்காக கைதிகள் ஒப்படைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, ஹாங்காங் சட்டசபையில் உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. கைதிகள் ஒப்படைக்கும் சட்டத்தில் இப்படி திருத்தம் கொண்டு வந்தால் அது ஹாங்காங்கின் சுதந்திரத்தை அழித்து விடும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக உறுப்பினர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். பலர் காயம் அடைந்தனர்.
ஜனநாயக ஆதரவு உறுப்பினர் கேரி பேன் மயங்கி சரிந்தார். அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சீனாவுக்கு ஆதரவான ஒரு உறுப்பினர், ஹாங்காங்குக்கு இது ஒரு துயரமான நாள் என்று கூறினார். ஆனால் அதிகாரிகள் தரப்பில், கொலை வழக்கு கைதிகளை அனுப்புவதற்கு மட்டுமே இந்த சட்டதிருத்தம் என கூறப்படுகிறது.