

துபாய்,
துபாய் நகரில் எக்ஸ்போ 2020 கண்காட்சி கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி அடுத்த ஆண்டு (2022) மார்ச் மாதம் 31-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த கண்காட்சியில் உள்ள இந்திய அரங்கில் இந்தியாவின் கலை, கலாசாரம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த அரங்கம் தொடங்கப்பட்டதில் இருந்து அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்த தலைவர்களும், மந்திரிகளும், பொதுமக்களும் பார்வையிட்டு வருகின்றனர். இந்த அரங்கை 28 நாட்களில் 1 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த அரங்கை பார்வையிட வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் மிகவும் முக்கியமான பண்டிகை தீபாவளி ஆகும். இந்த பண்டிகையை எக்ஸ்போ 2020 கண்காட்சியிலும், இந்திய அரங்கிலும் கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக இந்திய அரங்கில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. மேலும் துபாய் போலீசின் இசை குழுவினர் அமீரக, இந்திய தேசிய கீதங்களை இசைத்து பொதுமக்களை மகிழ்ச்சிப்படுத்தினர். இந்தியாவின் லடாக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகிறது.
துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி ஆம்பி தியேட்டரிலும் இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இசை நிகழ்ச்சி, கதை சொல்லும் நிகழ்ச்சி உள்ளிட்டவையும் நடந்து வருகிறது.
இந்திய அரங்கில் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சி வாரத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நவம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் பொதுமக்கள் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.