ரஷிய ராணுவத்தில் பாலியல் அடிமைகள்... எதிர்த்த பெண் மருத்துவரின் அதிர்ச்சி அனுபவம்

ரஷிய ராணுவத்தில் உயரதிகாரிகள் பெண் மருத்துவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியும், மீறினால் கடுமையான தண்டனையும் வழங்கி உள்ளனர்.
 கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மாஸ்கோ,

ரஷிய ராணுவத்தில் பெண் மருத்துவராக பணியாற்றிய வீராங்கனை மார்கரிட்டா. இவர் ரேடியோ ப்ரீ ஐரோப்பிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அவரது பிரிவில் பணியாற்றிய சக பெண் மருத்துவர்கள் களத்தில் மனைவிகளாக பயன்படுத்தப்பட்டு வந்து உள்ளனர். இதன்படி, அந்த பெண்கள் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு சமையல் செய்வது, தூய்மை செய்வது போன்ற பணிகளை செய்வதுடன், பாலியல் ரீதியாகவும் பணிவிடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அப்படி அவரையும் பயன்படுத்த சில அதிகாரிகள் முயன்று உள்ளனர். கர்னல் அதிகாரி ஒருவருக்கு அவரை அப்படி கள மனைவியாக செயல்பட கேட்டு உள்ளனர். ஆனால் மார்கரிட்டா மறுத்து விட்டார்.

இதன் விளைவாக அவரை கடுமையாக தண்டிக்கும்படி தளபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதன் எதிரொலியாக, ஒரு மாதத்திற்கு மார்கரிட்டா வெளியே தங்கி உள்ளார். பிற பெண்கள் இரவில் கூடாரங்களிலும், வீடுகளிலும் தங்கி உள்ளனர்.

ஆனால், நான் தரையில் படுத்தேன், சாலையோரம் மற்றும் ஒரு சிறிய காட்டு பகுதியில் இரவில் படுத்தேன். அப்படி செய்யும்போது, கர்னலுடன் படுக்க ஒப்பு கொள்வேன் என்பதற்காக, என்னை சோர்வடைய செய்ய அவர்கள் முயற்சித்தனர் என கூறுகிறார்.

அந்த படை பிரிவில் உள்ள தளபதிகளுடன் 7 பெண்களை இதுபோன்று சேர்க்க முயன்ற சம்பவங்களையும் நான் பார்த்தேன். இதுபோன்று ஒரு பெண், கள மனைவியாக ஆக்கப்பட்ட பின்னர், குடிபோதையில் அவரை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டார்.

பின்னர், உக்ரைன் படையினர் அப்படி செய்து விட்டனர் என வெளியுலகிற்கு காட்டுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து விட்டனர். அந்த பெண் நிரந்தரம் ஆக முடங்கி விட்டார்.

பல பெண்கள் இதுபோன்று பல ஆடவர்களுடன் ஒன்றாக படுக்க கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர் என அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். ஆலின்கா என்பவருக்கு பணம் கொடுத்து அவர் ஒரு சுற்று வந்து விட்டார். அடுத்து உனக்கும் பணம் கொடுக்க வேண்டும் என அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறினார்.

களத்தில் முன்னணியில் போரிட விரும்பாத வீரர்களும் தண்டிக்கப்பட்டனர். அவர்களை நிர்வாணப்படுத்தி, குளிர் நிறைந்த பாதாள அறைகளில், எலிகளுடன் ஒன்றாக விட்டு விடுவார்கள்.

அது வேலைக்கு ஆகவில்லை எனில், வீரர்கள் அவர்களே தங்களுக்கான புதைகுழிகளை தோண்டி கொள்ள வேண்டும். அதன்பின் அதில் அவர்களை சுற்றி கழிவுகளை கொண்டு மூடப்படும்.

அதன்பின்னர், அந்த படையின் தலைவர், அந்த குழிகளை நோக்கி இஷ்டம் போல் துப்பாக்கியால் சுடுவார் என கூறியுள்ளார்.

2017-ம் ஆண்டு வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மார்கரிட்டா பின்னர், உக்ரைனுக்கு எதிரான போருக்கு அனுப்பப்பட்டார். ரஷியாவுக்கு திரும்பி வந்த அவர் இந்த அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளார்.

அவர், புனர்வாழ்வுக்கான சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் இன்றளவும் தூங்கும்போது கெட்ட கனவுகள், தாக்குதல்கள் போன்ற எண்ணம் வருகிறது என்றும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப போராடுகிறேன் என கூறியுள்ளார்.

போர் குற்றங்கள் பற்றிய ஆய்வாளர் ஒருவர் கடந்த நவம்பரில், ரஷிய தளபதிகள் தங்களது படையினரிடம், உக்ரைனில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுங்கள் என உத்தரவிட்டனர் என கூறியுள்ளார்.

கடந்த காலங்களில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவ வீரர்கள், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com