உக்ரைன் விவகாரம்; ரஷியாவின் அறிவிப்பால் பதற்றம் அதிகரிப்பு! ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை நடத்த உள்ளது.
உக்ரைன் விவகாரம்; ரஷியாவின் அறிவிப்பால் பதற்றம் அதிகரிப்பு! ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்!
Published on

ஜெனிவா,

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன. உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது.

இப்போதைய நிலவரப்படி, உக்ரைனில் தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷிய போர் படைகள் பெருமளவில் உக்ரைன் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், இன்னும் காலம் கடந்து போகவில்லை, ரஷியா போரை தவிர்த்துவிட்டு அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரலாம் என்று பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.இதனையடுத்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சம்மதம் தெரிவித்துள்ளார் என வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. விரைவில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் விவகாரம் தொடர்பாக புதினுடன் ஒரே நாளில் 2 முறை தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.மேலும் அவர் அமெரிக்க அதிபர் பைடன் உடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்நிலையில், அவருடைய முயற்சியின் பலனாக இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு நிகழ இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு காரணமாக பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களை "சுதந்திரமானவை" என்று அங்கீகரிக்கும் ரஷ்ய அதிபர் புதினின் முடிவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

ரஷியாவின் அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோருடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும், அமெரிக்க அதிபர் பைடன், நேற்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசினார். உக்ரைனின் சுதந்திரத்தை பாதுகாக்க அமெரிக்கா துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

ரஷியாவின் அறிவிப்பை தொடர்ந்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்த அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன.இதனை தொடர்ந்து, இன்று உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்த உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com