வடகொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை

அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வடகொரியாவுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை
Published on

வாஷிங்டன்,

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதற்கு அளித்த உறுதியை எப்படி நிறைவேற்றிக்காட்டுவது என்பது தொடர்பாக வடகொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கூறினார்.

இதற்கு இடையே வடகொரியா மீது ஏற்கனவே விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக உள்ள நாடுகள் பற்றி விவாதிப்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை நாளை (திங்கட்கிழமை) கூட்டவேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com