இலங்கையில் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படும்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே

இலங்கையில் பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படும்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே
Published on

கொழும்பு,

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்ற பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆனாலும் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இன்னும் 3 நாட்களுக்கு எரி பொருள் சிலிண்டர் விநியேகம் கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை வரும் என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பல்வேறு நாடுகளின் உதவிகள் நாடப்பட்டு உள்ளது. இதற்கு சில பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. இது கிடைக்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

போதிய உரங்கள் இல்லாததால் விவசாய பணிகளை செய்ய முடியாத சூழ்நிலை நிலவுகிறது. வருகிற செப்டம்பர், அக்டோபர் வரை நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும் அதன்பிறகு பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்பட்டாலும் ஏற்பட லாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com