செலவை குறைக்க... கூகுள் நிறுவனம் அடுத்த அதிரடி; கலக்கத்தில் பணியாளர்கள்

கூகுள் நிறுவனம் செலவை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவித்துள்ள முடிவால் பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
செலவை குறைக்க... கூகுள் நிறுவனம் அடுத்த அதிரடி; கலக்கத்தில் பணியாளர்கள்
Published on

நியூயார்க்,

உலக பொருளாதாரம் மந்த நிலையின் ஒரு பகுதியாகவும், உக்ரைன் போர், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களாலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்தன.

இந்த பட்டியலில் கூகுள் நிறுவனமும் இடம் பெற்றது. இதன்படி, கடந்த ஜனவரி 3-ம் வாரத்தில் 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கும் அதிரடி முடிவை கூகுள் நிறுவனம் எடுத்தது. இதற்காக அந்த பணியாளர்களுக்கு தனியாக இ-மெயில் வழியே தகவல் அனுப்பப்பட்டது.

இந்த அதிர்ச்சியில் இருந்து பணியாளர்கள் மீள்வதற்குள் கூகுள் நிறுவனம் அடுத்த அறிவிப்பை வெளியிட்டு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செலவை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கையை அடுத்து, பணியாளர்களுக்கான பல்வேறு சேவைகளை கைவிடுவது என்று முடிவு செய்து உள்ளது.

இதன்படி, ஊழியர்களுக்கு பணியின்போது மசாஜ் சேவை வழங்குவது, உடலை கட்டுக்கோப்புடன் வைப்பதற்கான வகுப்புகள், பழுதடைந்த லேப்டாப்புக்கு பதிலாக புதிதாக ஒன்றை மாற்றி தருவது, கபேக்கள், போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவற்றை கைவிட கூகுள் நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

இதுபற்றி கூகுள் நிறுவனத்தின் நிதி துறை தலைவர் ரூத் போரட் மிக அரிதிலும் அரிது என்ற வகையில், அனைத்து பணியாளர்களுக்கும் இ-மெயில் அனுப்பி உள்ளார்.

அதில், செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்துவது பற்றி சுட்டி காட்டப்பட்டு உள்ளது. இதனால், 2023-ம் ஆண்டில் நீண்டகால சேமிப்புக்கான இலக்கை நிறுவனம் அடையும் என தெரிவித்து உள்ளது.

இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தில் பயன்பாட்டில் உள்ள காகிதங்களை இணைக்க உதவும் ஸ்டேபிளர்கள் மற்றும் ஒட்ட பயன்படும் டேப்புகள் உள்ளிட்டவற்றையும் கூட கூகுள் நிறுவனம் வழங்காமல் அவற்றை நிறுத்தி விடுவது என முடிவு செய்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com