

வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
மேலும், மத்திய கிழக்கில் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை பகுதியை ஈரான் மூடியுள்ளது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம், ஹோர்முஸ் நீரிணை மூடல் காரணமாக இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்தது.
இதையடுத்து, அமெரிக்கா - இந்தியா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொள்ள இந்தியா ஒப்புகொண்டது. இதனால், இந்தியாவுக்கு விதித்த வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.
இந்த சூழலில், தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை கருத்தில் கோண்டு ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக அண்மையில் அமெரிக்கா தெரிவித்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க இந்த குறுகிய கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியது.
இந்த நிலையில், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ‘அனுமதி’ வழங்கியது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், “அழுத்தத்தை குறைப்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அமெரிக்காவிடம் தேவையான அளவு எண்ணெய் இருக்கிறது. மேலும் அதிக எண்ணெய் மூலாதாரங்கள் நமக்கு உள்ளன” என்று தெரிவித்தார்.