

ஜெனீவா,
உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் 'உலக ரத்த தானம் செய்பவர்கள் தினத்தை' (WBDD) கொண்டாடுகின்றன. பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்த வகைகளின் தேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உயிர்காக்கும் வகையில் இரத்தத்தை தானமாக வழங்கும் தன்னார்வ மற்றும் ஊதியம் பெறாத இரத்த தானம் செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுமே இந்நாளின் நோக்கங்களாகும்.
நோயாளிகளுக்கு போதுமான அளவில் பாதுகாப்பான ரத்தம் மற்றும் இரத்த வகைகளை கிடைப்பதை உறுதிசெய்யும் ரத்த சேவை அமைப்பானது, ஒரு சிறந்த சுகாதார அமைப்பின் முக்கிய அங்கமாகும். தங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்காக தாமாக முன்வந்து ரத்தத்தை தானம் செய்யும் தன்னலமற்ற நபர்களை போற்றும் வகையில், இந்த நாளுக்கான உலகளாவிய கருப்பொருள் ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்படுகிறது.
இந்த ஆண்டின் கருப்பொருள் "மனிதநேயத்தின் ஒரு துளி - உயிர்காக்கும் அவர்களுக்கு ஒரு வணக்கம்." என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ரத்த தானத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்க, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று உலக ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1901-ல் ரத்த வகைகளை கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் (Karl Landsteiner) பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
உலக ரத்ததான தினம் முதன்முதலில் 2004ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. விபத்துகள், அறுவை சிகிச்சைகள், மற்றும் தீவிர நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு தகுந்த நேரத்தில் ரத்தம் கிடைப்பதை உறுதி செய்கிறது. 18 முதல் 65 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான நபர்கள் ரத்த தானம் செய்யலாம்.
மேலும் ரத்த தானம் செய்வது உடலை பலவீனப்படுத்தாது; மாறாக, உடலில் புதிய ரத்த செல்கள் உற்பத்தியை தூண்டுகிறது. ரத்தத்தில் உள்ள இரும்பு சத்தின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.