அமெரிக்க அரசாங்கத் திறன் துறைக்கு எலான் மஸ்க், விவேக் ராமசாமி தேர்வு - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

டொனால்டு டிரம்பின் அமைச்சரவையில் எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர் முக்கிய துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத் திறன் துறைக்கு எலான் மஸ்க், விவேக் ராமசாமி தேர்வு - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அமெரிக்காவில் இந்தியா, இங்கிலாந்து போன்ற ஆட்சி முறை கிடையாது. இதனால் அமைச்சர் பதவி என்ற பெயரில் பொறுப்புகள் வழங்கப்படாது. மாறாக அதே மத்திய அமைச்சரின் அதே பொறுப்புகளோடு அதிகாரத்தோடு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் ஜனாதிபதி மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு.. செனட் தரும் அடையாள ஒப்புதலுடன் செயலாளர்கள் ஆவார்கள்.

இந்நிலையில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறையை (D.O.G.E.) வழிநடத்துவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். DOGE என்பது இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவிய அணுகுண்டை உருவாக்கும் அமெரிக்காவின் திட்டத்தைக் குறிப்பிடுவதாகும். முன்னதாக டிரம்ப் தனது பிரச்சாரத்தின் போதே இந்த நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி இருந்தார்.

இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ""இந்த இரண்டு (விவேக் ராமசாமி, எலான் மஸ்க்) அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், பெடரல் ஏஜென்சிகளை மறுசீரமைப்பதற்கும் எனது நிர்வாகத்திற்கு வழிவகை செய்வார்கள். 'அமெரிக்காவைக் காப்பாற்றுவோம்' (Save America) இயக்கத்திற்கு இது அவசியம்.

செயல்திறனைக் கருத்தில் கொண்டு பெடரல் அதிகாரத்துவத்தில் எலான் மஸ்க் மற்றும் விவேக் ஆகியோர் மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன், அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக்குவதற்கு அவர்கள் உழைப்பார்கள். 2026 ம் ஆண்டு ஜூலை 4 ம் தேதிக்குள் அவர்களின் பணி முடிவடையும். சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட 250 வது ஆண்டு விழாவில் ஒரு சிறிய மற்றும் திறமையான அரசாங்கம் நாட்டிற்கு கிடைத்துள்ளது ஒரு "பரிசு" என்று அவர் தெரிவித்திருந்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com