இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா விசா பெற்றவர்கள் துபாய் வருவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா விசா பெற்றவர்கள் துபாய் வருவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த 6 நாடுகளை தவிர்த்து வேறு நாட்டில் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா விசா பெற்றவர்கள் துபாய் வருவதற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
Published on

துபாய்,

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா, இலங்கை மற்றும் உகாண்டா ஆகிய 6 நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து அமீரகத்துக்கு வருகை புரிய பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் குடியிருப்பு விசா பெற்றவர்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளுடன் மத்திய அடையாளம் மற்றும் குடியுரிமை ஆணையம், குடியிருப்பு மற்றும் வெளிநாட்டவர் விவகார பொது இயக்குனரகத்தின் முன் அனுமதி பெற்று நாட்டிற்குள் வருகை புரிய அனுமதி வழங்கப்பட்டது. இதில் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளின் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் அந்த நாடுகளில் இருந்து விசிட் விசாவில் துபாய்க்கு வருகை புரியலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சத்யதேவ் சுசர்லா என்பவர் எமிரேட்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் கேள்வி எழுப்பினார்.

அதில் நான் அமீரகத்தில் வசிக்கிறேன். எனது 16 வயது மகனுக்கு தடுப்பூசி போடவில்லை. அவர் தற்போது விசிட் விசாவில் துபாய் வருகை புரிய அர்மீனியாவின் தலைநகர் ஏரவன் நகரில் 14 நாட்கள் தங்கி பிறகு மீண்டும் அங்கிருந்து வரலாமா? என கேட்டு இருந்தார். அதற்கு பதிலளித்த எமிரேட்ஸ் நிறுவனம், உங்கள் மகன் இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெளியே 14 நாட்கள் தங்கிவிட்டு விசிட் விசாவின் மூலம் துபாய் வரலாம். இங்கு வரும்போது மற்ற விதிமுறைகள் அனைத்தும் அவருக்கு பொருந்தும் என பதிலளித்துள்ளது.

இதனை அடுத்து நாட்டிற்கு வெளியே 14 நாட்கள் தங்கி விசிட் விசா பெற்றவர்கள் வருகை புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல வெளிநாடுகளில் 14 நாட்கள் தங்கி வருகை புரிபவர்கள் கட்டாயம் விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளை க்யூ.ஆர் கோட் வசதியுடன் கையில் கொண்டு வரவேண்டும். அதேபோல விமான நிலையத்தில் செய்யப்படும் ரேபிட் பிசிஆர் பரிசோதனை முடிவுகளும் கட்டாயமாகும். பிறகு அவர்களுக்கும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய உடனே மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.

இந்த தகவலை பிளை துபாய் விமான நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com