

வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதேவேளை, அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மோதலை குறைக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதனிடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. அதன்படி, தற்காப்பு நடவடிக்கை எனக்கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த மோதலின்போது நேற்று ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் ஈரானை கடுமையாக தாக்குவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.