‘என்னை கொலை செய்ய டிரம்ப் உத்தரவு’ - வெனிசுலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
‘என்னை கொலை செய்ய டிரம்ப் உத்தரவு’ - வெனிசுலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

கராக்கஸ்,

எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடியும், அரசியல் குழப்பமும் நிலவி வருகிறது. அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு தொடர்ந்து நெருக்கடிகள் வலுத்து வருகின்றன.

தனது நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காவே முழு காரணம் என்றும், வெனிசுலாவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாகவும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னை கொலை செய்ய உத்தரவிட்டுள்ளதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் கூறுகையில், நான் மிகவும் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்கு பலியாகினேன். அமெரிக்க அரசு என் தலைக்கு 15 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.109 கோடியே 75 லட்சத்து 92 ஆயிரம்) வழங்கியது. என்னை கொலை செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் என்னை கொல்ல வெனிசுலாவில் துப்பாக்கி சுடும் வீரர்களை நியமிக்க முயற்சிக்கிறார்கள். என்னை கொல்லும் கூலிப்படையை டிரம்ப் தேடிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உள்பட அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் 14 பேரை போதை பொருள் கடத்தல் காரர்களாக அறிவித்த அமெரிக்கா அவர்களை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com