

வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. 279 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தலில் முறைகேடு நடப்பதாக துவக்கத்தில் இருந்தே டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில், தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ள டிரம்ப் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டிரம்பின் பிரசார குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டதாக தவறுதலாக ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. அவரது ஆதரவு மீடியாக்கள் அவருக்கு உதவி செய்வதற்காகவும், உண்மையை மறைக்கவும் இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல் முடிவடைய இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்பதுதான் உண்மை. எந்த ஒரு மாகாணத்திலும் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கவில்லை. முக்கியமான மாகாணங்களில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பற்றி நீதிமன்றத்தை நாடியுள்ளோம். எங்கள் சட்ட போராட்டம் இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது.
திங்கட்கிழமை முதல் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்து சரியான வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்க உள்ளோம். அமெரிக்க மக்கள் ஒரு நேர்மையான தேர்தலுக்கு தகுதியானவர்கள். இதுதான் நமது தேர்தல் நடைமுறை மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்கு காரணமாக அமையும் என தெரிவித்துள்ளது என்றார்.