

வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேவேளை, ஈரான் புதிய உச்சதலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஆசியா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய கடல்வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியுள்ளது. மேலும், இந்த வழியாக கப்பல் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை ஈரான் தடுத்து நிறுத்தினால் அந்நாட்டின் மீது ஏற்கனவே நடத்தப்பட்ட தாக்குதலை விட 20 மடங்கு கூடுதலாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை தடுக்க ஈரான் ஏதேனும் முயற்சித்தால் அந்நாட்டின் மீது ஏற்கனவே நடத்திய தாக்குதலை விட 20 மடங்கு கூடுதல் தாக்குதலை அமெரிக்கா நடத்தும்.
ஈரானால் மீண்டும் கட்டமைக்க முடியாது எளிதான இலக்குகளை நாங்கள் அழிப்போம். மரணம், நெருப்பு மற்றும் கோபம் அவர்களை ஆட்சி செய்யும். ஆனால், இது எல்லாம் நடக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.