

வாஷிங்டன்
அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் தலைவர்களின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் செனட் சிறுபான்மைத் தலைவர் செனட்டர் சக் ஷுமர் ஆகியோர் அமெரிக்காவின் மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்திற்கான 5.7 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்ய மறுத்துவிட்டார். இதை தொடர்ந்து கூட்டத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநடப்பு செய்தார்.
சபாநாயகர் பெலோசி பேசியது டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர் கூறும் போது சக் மற்றும் நான்சி ஆகியோருடன் ஏற்பட்ட சந்திப்பால் எனது நேரம் தான் வீணானது. என டிரம்ப் தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.
30 நாட்களில் என்ன நடக்கும் என்று நான் கேட்டேன், நீங்கள் ஒரு சுவர் அல்லது எஃகு தடை உள்ளிட்ட எல்லை பாதுகாப்பை அங்கீகரிக்க போகிறீர்களா என கேட்டேன். நான்சி இதற்கு இல்லை என கூறினார். இதனால் நான் குட்பை சொல்லிவிட்டு வந்து விட்டேன் வேறு ஒன்றும் இல்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் கூறி உள்ளார்.
எல்லை பாதுகாப்புக்கு சுவர் விவகாரத்தால் டிரம்ப் நிர்வாகம் மற்றும் எதிர்க்கட்சி ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு இடையே கடுமையான வேறுபாடுகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அரசாங்கத்தின் ஒருபகுதி முடங்கி போய் உள்ளது.
புதன்கிழமையுடன் இது 19 நாள் ஆகிறது. 1995-96 ஆம் ஆண்டு 21-நாள் பணிநிறுத்தத்திற்குப் பிறகு வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய வேலை நிறுத்தமாக இது அமைந்து உள்ளது .