

டொரண்டோ
டிரம்ப்பின் வரிவிதிப்பு எதிரொலியாக அமெரிக்க பொருட்களை புறக்கணித்து கனடா இளைஞர்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
கனடாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான வரிவிதிப்பை அறிவித்துள்ளார். இதன்படி, கனடாவின் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சரக்குகளுக்கு கடந்த 22-ந்தேதி, 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.
இந்த இறக்குமதி வரி விதிப்புக்கு கனடா பிரதமர் மார்க் கர்னியின் அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பதிலுக்கு கனடாவும், 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்து அதிரடி காட்டியது.
இந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் அதிகரித்து காணப்படும் சூழலில், கனடா இளைஞர்கள் தங்களுடைய தேசப்பற்றை வெளிப்படுத்தும் வகையில், நடந்து கொள்கின்றனர்.
அவர்கள் அமெரிக்க தயாரிப்பு பொருட்களை நிராகரித்து வருகின்றனர். இதன்படி, அமெரிக்காவின் ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் பல்வேறு மாகாணங்களில் உள்ள குடோன்களில் இருந்து நீக்கப்படுகின்றன.
கனடாவில் வாடிக்கையாளர்களின் போக்கிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இதுபற்றி மான்ட்ரியல் சூப்பர்மார்க்கெட் மேலாளரான பீட்டர் கியானோபோலிஸ் கூறும்போது, பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர். இந்த மனப்போக்கு அவர்களிடம் அதிகரித்து உள்ளது.
அவர்கள் கனடா தயாரிப்புகளை விரும்பி வாங்கி செல்கின்றனர் என்றார். எலெக்ட்ரானிக் பொருட்கள், மளிகை பொருட்கள், உணவு பொருட்கள் என பல்வேறு தயாரிப்புகளையும், அவை கனடாவில் உற்பத்தியான பொருட்களா? என பார்த்து, பார்த்து வாங்குகின்றனர். இதுபோக அமெரிக்காவுக்கான சுற்றுலாவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 25 சதவீதம் குறைந்துள்ளது.
இதனால், கனடாவை ஒட்டிய அமெரிக்க எல்லை பகுதிகளில் உள்ள சுற்றுலா மையங்கள் அவர்களை பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றனர். எனினும், அமெரிக்காவை புறக்கணிக்கும் வகையில், அந்நாட்டுக்கு சுற்றுலா செல்லாமல் கனடாவாசிகள் தவிர்த்து வருகின்றனர். இதனால், அமெரிக்காவில் சுற்றுலா பாதிக்கப்பட்டு உள்ளது.