

வாஷிங்டன்,
அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாக்களில் பெரும் கெடுபிடிகளை காட்டி வருகிறது. இதில் அடுத்த அதிரடியாக அமெரிக்காவின் எச் 1பி விசா கட்டணத்தை ரூ.98 லட்சமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்த திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்காக அமெரிக்கா சார்பில் எச் 1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவின் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இதனை 6 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். ஓராண்டுக்கு 85 ஆயிரம் எச் 1பி விசாக்களை மட்டுமே அமெரிக்கா வழங்குகிறது. இதில் 71 சதவீதத்தை இந்தியர்கள் பெறுகின்றனர். 12 சதவீத விசாக்களை சீனர்களும் இதர நாடுகளை சேர்ந்தோர் 17 சதவீத விசாக்களையும் பெறுகின்றனர்.
கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு எச் 1 பி விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு எச் 1பி விசா கட்டணம் ரூ.1.9 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டு மென்பொறியாளர்கள் பணியில் சேருவதை தடுக்க மறைமுகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அமெரிக்காவின் பல்வேறு நீதிமன்றங்கள் எச் 1பி விசா கட்டண உயர்வுக்கு தடை விதித்தன. இதை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது. இதன்காரணமாக தற்போது எச் 1பி விசாவுக்கு ரூ.1.9 லட்சம் முதல் ரூ.4.7 லட்சம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் புதிய பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதில், எச் 1 பி விசா கட்டணத்தை ரூ.98 லட்சமாக அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கட்டண உயர்வை நடப்பாண்டு இறுதிக்குள் அமல்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான விசா ரத்து நடவடிக்கையாக, வணிகம் மற்றும் சுற்றுலா சார்ந்த சுமார் 2 லட்சம் விசாக்களை ரத்து செய்வதன் மூலம் குடியேற்றக் கட்டுப்பாடுகளை இறுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.