துனிசியா நாட்டின் நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் எடுத்த அதிரடி முடிவு

பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து, துனிசியா நாட்டின் அதிபர் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

துனிஸ்,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, துனிசியா. பொதுமக்களின் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து, இந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 8 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்தது. அரசியல் சாசனத்தை மாற்றி எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிபர் கைஸ் சையத் அதிகாரத்தை தானே கையில் எடுத்துக்கொண்டார்.

அதில் இருந்து நாட்டின் பொருளாதார நிலை மீதான கோபம், மக்களை தெருக்களில் இறங்கி போராட வைத்தது. சில போராட்டங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்களும் ஏற்பட்டன.

இந்நிலையில் நேற்று முன்தினம், எம்.பி.க்கள் காணொலிக்காட்சி வழியாக கூடி, நாடாளுமன்றத்தை முடக்கி வைத்த அதிபரின் உத்தரவை ரத்து செய்ய வாக்களித்தனர். அதன்பின்னர் அதிபர் கைஸ் சையத், அதிரடியாக நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, நாடாளுமன்றம் அதன் சட்டப்பூர்வ தன்மையை இழந்து விட்டது. அது நாட்டைக் காட்டிக்கொடுத்து விடடது. அதற்கு காரணமான எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது பற்றி அதிபர் கைஸ் சையத் டி.வி.யில் தோன்றி நாட்டுமக்களிடம் பேசினார். அப்போது அவர், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். நாட்டையும், நாட்டின் அமைப்புகளையும் காப்பதற்கு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளேன் என கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com