ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எண்ணெய் கப்பல்கள் விபத்து - அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் தவறான வழிகாட்டுதலை பின்பற்றியதால் 2 எண்ணெய் கப்பல்கள் விபத்தில் சிக்கியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எண்ணெய் கப்பல்கள் விபத்து - அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு
Published on

தெஹ்ரான்,

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, சுமார் 3 மாதங்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. உலக எண்ணெய் வர்த்தகத்தின் இதயமாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகநாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

பல நாடுகளில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பின்னர் அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்ட நிலையில், ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் மீண்டும் அதிகரித்தது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்தது.

அதே சமயம், ஈரானின் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பிருந்த சூழல் இன்னும் திரும்பவில்லை. இந்த ஜலசந்தி வழியே செல்லக்கூடிய அனைத்து கப்பல்களும், ஈரான் அறிவித்த கடல் வழியிலேயே பயணிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாது” என்று தெரிவித்தது.

இதனால், ஆத்திரமுற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில், துருக்கியின் அங்காரா நகரில் நடந்த நேட்டோ உச்சி நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடியில் மோதி வெடிவிபத்தில் சிக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் தவறான வழிகாட்டுதலை பின்பற்றி, ஹார்முஸ் ஜலசந்தியில் தடை செய்யப்பட்ட ஆபத்தான பாதை வழியாக சென்றதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் ஈரானின் குற்றாச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரான் புரட்சிகர காவல்படையின் பெரும்பாலான குற்றச்சாட்டுகளைப் போலவே இதுவும் பொய்யானது" என்று பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com