வியட்நாமை புரட்டி போட்ட யாகி புயல்: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வியட்நாமை புரட்டி போட்ட யாகி புயல்: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
Published on

ஹனோய்,

பிலிப்பைன்சில் உருவான யாகி புயலால் கடந்த வாரம் அங்கு கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி அங்கு 14 பேர் பலியாகினர். சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் நேற்று வியட்நாமை தாக்கியது. வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கி.மீ. வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை கொட்டியது.

புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் சுமார் 30 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. யாகி புயல் வியட்நாமையை புரட்டி போட்டுள்ளது.

புயல் காரணமாக 4 விமான நிலையங்கள் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், யாகி புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 229 பேர் காயம் அடைந்துள்ளனர். வேருடன் சாய்ந்த மரங்கள், இடிந்து விழுந்த மின்கம்பங்கள் மற்றும் வீடுகளின் கூரைகளை அப்புறப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. மீட்புப் பணிகளில் ராணுவம், போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com