

லண்டன்,
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால், தலைநகர் லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் நான்கு அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புதிய வகை வைரஸ்தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், இங்கிலாந்துடனான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகளை ரத்து செய்துள்ளன. இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளதால் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த 8 நாட்களாக 50 ஆயிரத்தை தாண்டியே கொரோனா பாதிப்புகள் பதிவாகி வந்தன.
இந்நிலையில் இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக, ஒரே நாளில் 60,916 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 27,74,479 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்பால் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 830 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76,305 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
முன்னதாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், தேசிய அளவிலான ஊரடங்கை அறிவித்தார். இதன்படி ஆறு வாரங்களுக்கு இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் எனத் தெரிகிறது. மேலும் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை அமல்படுத்தப்பட்டிருந்ததைப் போல மிக கடுமையானதாக இருக்கும் என்று தெரிகிறது.