நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை

இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிரான நிரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை இங்கிலாந்து ஐகோர்ட்டில் நடந்தது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பி சென்றார். இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், கடந்த 2019-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து அவர் லண்டன் சிறையில் இருந்து வருகிறார்.

இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதி சாம் கூசி உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து இங்கிலாந்து ஐகோர்ட்டில் நிரவ் மோடி மேல்முறையீடு செய்துள்ளார். அதன் மீது கடந்த ஆகஸ்டு மாதம் விசாரணை நடந்தது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் விசாரணை தொடங்கியது. நிரவ் மோடியின் மனநலம் சரியில்லை என்றும், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைத்தால், அவர் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் அவரது வக்கீல் வாதிட்டார். ஆனால், அவருக்கு உரிய சிகிச்சை அளித்து பார்த்துக்கொள்வதாக இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது. மேல்முறையீட்டில் எந்த தரப்பு தோல்வி அடைந்தாலும், இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com