இங்கிலாந்து உள்துறை மந்திரி ஒப்புதல்; நிரவ் மோடியை நாடு கடத்துவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது

நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரி பிரீத்தி பட்டேல் ஒப்புதல் அளித்து உள்ளார்.
இங்கிலாந்து உள்துறை மந்திரி ஒப்புதல்; நிரவ் மோடியை நாடு கடத்துவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது
Published on

லண்டன்,

இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக பணமோசடி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதுதவிர வங்கிகளில் இவர் வாங்கிய கடன் தொகையையும் திருப்பி செலுத்தவில்லை.

சி.பி.ஐ. விசாரணையை அடுத்து, கடந்த 2018ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி சென்றார். சி.பி.ஐ. வேண்டுகோளின்பேரில், அங்கு கைது செய்யப்பட்டார். லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.

நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரி இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கில் நீதிபதி சாமுவேல் கூசி கடந்த பிப்ரவரி இறுதியில் தீர்ப்பு வழங்கினார்.

அதில் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிபதி உத்தரவிட்டார். மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால், அவர் இந்தியாவுக்கு திரும்பி அந்த வழக்குகளை சந்திக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி கூறினார்.

இந்த நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரி பிரீத்தி பட்டேல் ஒப்புதல் அளித்து உள்ளார். இதனை சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் இன்று கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நாடு கடத்தும் ஒப்பந்தப்படி, குற்றவாளியை நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து உள்துறை மந்திரிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதனால் அவர் ஒப்புதல் அளித்து விட்ட நிலையில் நிரவ் மோடி நாடு திரும்புவதில் உள்ள சிக்கல் தீர்ந்து விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com