

லண்டன்,
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால், அங்கு நாடுமுழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும், கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இங்கிலாந்தில் புதிய வகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளதால் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 59,937 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை தற்போது 30,17,409 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,035 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80,868 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14,06,967 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக 15,29,574 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது.