2 டோஸ் கோவேக்சின்: இந்தியர்கள் 22-ஆம் தேதி முதல் இங்கிலாந்து வரலாம் - மகிழ்ச்சி அறிவிப்பு

2 டோஸ் கோவேக்சின் செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
2 டோஸ் கோவேக்சின்: இந்தியர்கள் 22-ஆம் தேதி முதல் இங்கிலாந்து வரலாம் - மகிழ்ச்சி அறிவிப்பு
Published on

லண்டன்

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசி, இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிக்கும் இங்கிலாந்து அரசு அங்கீகாரம் அளித்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் டிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் நவம்பர் 22 முதல் இரண்டு டோஸ் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு, தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவைகளில் இருந்து விலக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி கிடைத்தது. அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கிலாந்துக்கு வரும் அனைத்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான பயண விதிகளையும் இங்கிலாந்து அரசு எளிதாக்கியுள்ளது. அவர்கள் இப்போது எல்லையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

இது தவிர சீனாவின் சினோவேக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளின் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பயணக்கட்டுப்பாடுகள் இருக்காது என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலிய அரசும் அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com