

கீவ்
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ஹோலோசீவ்ஸ்கி என்ற மாவட்டத்தில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் மக்கள் பலர் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.
இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சென்று தாக்குதல் நடத்திய மர்ம நபரை சுட்டு வீழ்த்தினர். ஆயுதமேந்திய நபர் ஒருவர் கீவ் நகரில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார் என்று அந்த தகவலை அதிபர் ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தி உள்ளார்.
சம்பவத்தின்போது, வணிக வளாகத்தில் இருந்த மற்ற நபர்கள் மீட்கப்பட்டனர். இதுபற்றி நாட்டின் உள்விவகார துறை மந்திரி இஹோர் கிளிமென்கோ தன்னிடம் பேசும்போது, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது என கூறினார்.
அனைத்து சூழல்களும் தெளிவாக்கப்பட்டு விட்டன. சம்பவம் நடந்ததில் இருந்து 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். 10 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 4 பணய கைதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர் என்று கூறினார்.