

கீவ்,
உக்ரைன் மீது ரஷியா 42-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:-
ஏப்ரல் 6, 9.20 PM
உக்ரைனின் புச்சா நகரில் நடைபெற்ற கொலைகளுக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனின் தேசியக் கொடியை அவர் முத்தமிட்டுள்ளார்.
உக்ரைனில் நடைபெறும் போர் தொடர்பான சமீபத்திய செய்திகள் நிம்மதியையும் நம்பிக்கையும் அளிப்பதற்கு பதிலாக, புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகள் உள்ளிட்ட புதிய கொடுமைகளை ஏற்படுத்தியுள்ளது, என அவர் தெரிவித்ததாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
"பொதுமக்கள், பாதுகாப்பற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக கொடுமைகள் அதிகரித்துள்ளன" என அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 6, 8.20 PM
உக்ரைனில் புச்சா நகரில் தாங்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக, 25 பெண்கள் மற்றும் சிறுமிகள் கூறியுள்ளதாக, மூத்த உக்ரைன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாடாளுமன்ற மனித உரிமைகள் ஆணையர் லியூட்மிலா டெனிசோவா கூறுகையில்,
இதுதொடர்பான உதவி எண்ணுக்கு வந்த புகார்களில், 14 முதல் 24 வயதுக்குட்பட்ட குறைந்தது 25 பெண்கள் மற்றும் சிறுமிகள் ரஷியப்படையினரால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டதாக கூறியதாக தெரிவித்துள்ளார்.
"உக்ரைன் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகள்", ராணுவ குற்றங்கள் நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது ரஷியப் படையினரின் "புதிய ஆயுதம்" எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "மொத்தமாக 14-24 வயதுக்குட்பட்ட 25 பெண்கள் மற்றும் குழந்தைகள் ரஷியப்படையினரால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
"கடந்த ஒரு மாதமாக இது நடைபெற்று வருகிறது. இந்த மோசமான குற்றங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறோம், ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனை கிடைக்கும்," என தெரிவித்தார்.
புச்சா நகரில் இத்தகைய கொடுமைகளை இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ரஷியா மறுத்துள்ளது.
ஏப்ரல் 6, 7.20 PM
3 ரஷிய தூதர்களை நார்வே வெளியேற்றியது
ஒஸ்லோவில் உள்ள ரஷிய தூதரகத்தில் பணிபுரியும் மூன்று தூதரக அதிகாரிகளை வெளியேற்ற நார்வே முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 6, 6.20 PM
ரஷிய தாக்குதலில் கீவ் நகரில் 80 பலி - கீவ் கவுன்சில் தகவல்
போர் தொடங்கியதில் இருந்து தலைநகரில் 89 பேர் கொல்லப்பட்டதாக கீவ் கவுன்சில் கூறியுள்ளது.
பிப்ரவரி 24 அன்று ரஷியா தனது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து உக்ரைன் தலைநகரில் நான்கு குழந்தைகள் உட்பட 89 பேர் கொல்லப்பட்டதாக கீவ் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் 398 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 167 குடியிருப்பு கட்டிடங்கள் ரஷிய தாக்குதல்களால் சேதமடைந்துள்ளதாக கவுன்சில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் "வான்வழித் தாக்குதல்களின் அச்சுறுத்தல் உள்ளது" என்று கூறி, பிராந்தியத்தில் இருந்து ரஷியப் படைகள் சமீபத்தில் பின்வாங்கிய போதிலும், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றும்படி குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6, 5.20 PM
இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் மரியபேல் நகரில், கடுமையான மேதல் நடந்து வருகிறது. விமானப்படைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்து வருகிறது. அங்கு சூழ்நிலை மிகவும் மேசமடைந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 6, 4.20 PM
ரஷியா - உக்ரைன் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்படும் நிபந்தனைகளை உக்ரைன் அதிபர் ஏற்றுக் கொள்வார் என நம்புகிறோம். நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ரஷியா தயாராக உள்ளது - கிரெம்ளின் மாளிகை
ஏப்ரல் 6, 3.20 PM
தெற்கு உக்ரேனிய நகரமான மெலிடோபோல் நகரின் மேயர், இவான் ஃபியோடோரோவ் மக்களுக்கு ஆற்றிய உரையில்,
ஆக்கிரமிப்பு ரஷிய துருப்புக்கள் பயிரின் விதைகளை சீர்குலைக்க "தங்களால் முடிந்ததைச் செய்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
"அவர்கள் வயல்களைச் பீரங்கி கொண்டு நாசம் செய்கிறார்கள், விவசாய உபகரணங்களையும் சேமிப்புக் கிடங்குகளைத் தேடுகிறார்கள், உபகரணங்களைத் திருடுகிறார்கள் என்றார்.
ரஷியாவும் உக்ரைனும் உலகின் மிகப்பெரிய கோதுமை உற்பத்தியாளர்கள்.
உக்ரைனிலிருந்து ஏற்றுமதியில் ஏற்படும் இடையூறால் தானியங்களின் விலையை உயர்த்தி அது ரஷிய விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.
ஏப்ரல் 6, 2.20 PM
ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கும் மேற்கத்திய நாடுகள்
மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புச்சாவில் நடந்த படுகொலைகள் குறித்து ரஷியா மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புச்சாவில் நடந்த படுகொலைகளுக்கு "சந்தேகத்திற்கு இடமின்றி" கண்டனம் தெரிவிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 6, 1.20 PM
ரஷியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு மீது ஐரோப்பிய யூனியன் தடை விதிக்க வேண்டும் - ஐரோப்பிய யூனியன் தலைவர் மைக்கெல்
ஏப்ரல் 6, 9.55 AM
ரஷியாவில் புதிய முதலீடுகள் அனைத்திற்கும் தடை விதிக்க அமெரிக்கா முடிவு
ஏப்ரல் 06, 05.59 a.m
ரஷியாவுக்கு எதிரான புதிய தடைகள் அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனங்களை குறிவைக்கும் என அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
ஏப்ரல் 06, 05.51 a.m
ரஷியாவின் பொருளாதாரத் தடைகள் அதிகமாகும் என்ற எதிர்பார்ப்பில் ஐரோப்பிய ஒன்றியப் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஏ.எப்.பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
ஏப்ரல் 06, 04.33 a.m
எங்கள் நலனுக்காகவோ, அமெரிக்க மக்களின் நலனுக்காகவோ ரஷியாவை எதிர்க்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 06, 04.11 a.m
உக்ரைனுக்கு எங்களின் வரலாற்று ஆதரவைத் தொடர கடைமைப்பட்டுள்ளோம் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி
ஏப்ரல் 06, 03.16 a.m
உக்ரைனுக்கு எச்.ஐ.வி மருந்துகளை உலக சுகாதார அமைப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 06, 02.09 a.m
மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் பகுதியில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி தகவல் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 06, 01.06 a.m
ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு வெளிநாட்டுக் கப்பல் மரியுபோலில் மூழ்கியதாக கொடிப் பதிவேடு கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 06, 12.52 a.m
ரஷிய டார்க்நெட் சந்தை மற்றும் கிரிப்டோ பரிமாற்றத்தின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 06, 12.32 a.m
உக்ரேனில் ரஷ்யாவின் "போர்க்குற்றங்களுக்கு" பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷியாவில் புதிய முதலீடுகளுக்கு தடை உட்பட கடுமையான புதிய தடைகளை விதிக்கும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
ஏப்ரல் 06, 12.15 a.m
கிழக்கு உக்ரைனில் அமில கிடங்கு மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதை சுவாசித்தால், விழுங்கினால் ஆபத்தானது என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தொடுத்த போர், 2-வது மாதமாக நீடிக்கிறது. இந்த போரில் தலைநகர் கீவ், மரியுபோல், கார்கிவ், கெர்சன், செர்னிஹிவ் என பலநகரங்களில் கட்டமைப்புகளை ரஷியா தரை, வான், கடல் என மும்முனை தாக்குதல்களால் அழித்தன.
இந்த நகரங்களில் குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் தாக்கப்பட்டு, எலும்புக்கூடுகளாக காட்சி அளிக்கின்றன. ஆனாலும் ரஷியா நினைத்தபடி தலைநகரை பிடிக்க முடியவில்லை. உக்ரைன் படைகள் துணிச்சலுடன் எதிர்த்து நின்று சண்டை போடுகின்றன.
இந்த போரில் ரஷிய படைகள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. இதுவரை 18 ஆயிரத்து 500 ரஷிய படை வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 676 டாங்கிகள், 1,858 கவச வாகனங்கள், 150 போர் விமானங்கள், 135 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன.
ரஷியாவே 1,351 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது.
தலைநகர் கீவைச்சுற்றிலும் உள்ள பகுதிகளை உக்ரைன் படைகள் மீட்டெடுத்துள்ள நிலையில், அங்கு 410 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பாவி மக்களை கொன்று தெருக்களிலும், குப்பைத்தொட்டிகளிலும் உடல்கள் வீசப்பட்ட புச்சா நகரில், சித்ரவதை செய்வதற்கென்றே ஒரு அறை இருந்ததாக உக்ரைனிய அட்டார்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அங்குள்ள குழந்தைகள் சுகாதார மையத்தின் அடித்தளத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில், 5 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
புச்சா தேவாலய கல்லறை தோட்டத்தின் முனையில் கருப்பு பிளாஸ்டிக் உறைகளில் சுற்றப்பட்ட உடல்கள் காணப்பட்டதாகவும் ஊடக தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் பலரும் கார்களில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் அல்லது நகரை விட்டு வெளியேற முயன்றபோது குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன. புச்சாவில் அரங்கேறிய போர்க்குற்றங்களுக்கு உலக அளவில் தலைவர்கள் தொடர்ந்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இப்போது ரஷிய படைகள் தங்கள் கவனத்தை கிழக்கு உக்ரைன் பக்கம் திருப்பி உள்ளன. அங்கு லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் நைட்ரிக் அமில கிடங்கின்மீது ரஷிய படைகள் தாக்கி உள்ளன. இதை உறுதிப்படுத்திய அந்த மாகாண கவர்னர் செர்ஹி ஹைடாய், ரூபின்ஸ்னே அருகில் நைட்ரிக் அமில சேமிப்பு கிடங்கு மீது ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. இதை சுவாசித்தால், விழுங்கினால், அது சருமத்துடன் தொடர்பு கொண்டால் அது ஆபத்தானது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் கதவுகள், ஜன்னல்களை மூடிக்கொண்டு உள்ளே இருக்க வேண்டும். ஈரமான முக கவசங்களை அணிந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது அங்குள்ள மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி உள்ளது.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஷிய படைகள் கைவிடவில்லை. வரும் வாரங்களில் கிழக்கு உக்ரைனில் டான்பாஸ் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதில் ரஷிய படைகள் கவனம் செலுத்த முயற்சிக்கும் என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்தார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவீடன், டென்மார்க் நாடுகளைத் தொடர்ந்து ஸ்பெயினும் ரஷிய தூதரையும், அதிகாரிகளையும் வெளியேற்ற முடிவு எடுத்துள்ளது.