

பின்வாங்கிய ரஷிய படைகள்
உக்ரைன் மீதான ரஷிய போரில், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரம் முக்கிய இடம் வகித்து வந்தது. நாட்டின் வட கிழக்கில் உள்ள இந்த நகரம், கோட்டை நகரம் என அழைக்கப்பட்டு வந்தது. போர் தொடங்கிய காலம்தொட்டு இந்த நகரை கைப்பற்றுவது ரஷிய படைகளின் முக்கிய நோக்கமாக இருந்தது.
2 மாதங்களுக்கு மேலாக முயற்சித்தும் அதில் அவர்கள் வெற்றி பெற முடியவில்லை.
ரஷிய படைகள் கார்கிவ் நகரை கைப்பற்றும் முயற்சியை கைவிட்டு விடுவார்கள் என்று அமெரிக்காவைசேர்ந்த சிந்தனைக்குழு கணித்து இருந்தது. அது இப்போது உண்மையாகி இருக்கிறது. உக்ரைன் படைகளின் எதிர்தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் கார்கிவ் நகரில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கின. இந்த நகரில் கட்டிடங்களும், பொதுமக்களும் ரஷிய படைகளின் தாக்குதலுக்கு ஆளானாது மட்டும்தான் மிச்சம். ரஷிய படைகள் பின்வாங்கி விட்டதால் அந்த நகர மக்கள், அங்கு திரும்பி வரத்தொடங்கி விட்டனர்.
மேயர் பேட்டி
இதுபற்றி நகர மேயர் இஹோர் டெரகோவ் கூறியதாவது:-
கார்கிவ் போரில் நாங்கள் வெற்றிபெற்றிருக்கிறோம். கார்கிவ் நகரினுள் ரஷிய படையினர் இல்லை. ரஷிய டாங்குகளும், கவன வாகனங்களும் உக்ரைன் படைகளால் அழிக்கப்பட்டு விட்டன. கார்கிவ் பிராந்திய பாதுகாப்பு மற்றும் உக்ரைனிய ஆயுதப்படைகளின் முயற்சியால், ரஷிய படையினர் நகர எல்லையில் இருந்து வெகுதொலைவில், எல்லையை நோக்கி பின்வாங்கி விட்டனர்.
தற்போது நகரம் அமைதியாக இருக்கிறது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகரத்துக்கு திரும்பத்தொடங்கி உள்ளனர். உக்ரைன் போரில் இது ஒரு முக்கிய திருப்பம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையொட்டி கார்கிவ் பிராந்திய கவர்னர் ஓலெ சின்யெகுபோவ் கூறும்போது, ரஷிய படைகள் பின்வாங்கி விட்டாலும் இன்னும் ஆபத்து உள்ளது. மக்கள் தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். ரஷிய துருப்புகள் நகர பகுதியில் பெருமளவில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர் என தெரிவித்தார்.
உக்ரைன் எதிர் தாக்குதல்
இஜியம் நகரில் ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் படைகள் எதிர் தாக்குதல் நடத்துவதாக கார்கிவ் பிராந்திய ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி சமூக ஊடகத்தில் வெளிட்ட பதிவில், ரஷிய படைகள் சில திசைகளில் பின்வாங்குகின்றன என கூறப்பட்டுள்ளது.
இந்த நகரை ரஷிய படைகள் கடந்த மாதம் 1-ந் தேதி கைப்பற்றின. இந்த நகரின் 80 சதவீத பகுதிகள் போரினால் அழிக்கபட்டுள்ளதாக நகர கவுன்சில் அதிகாரி மேக்சிம் ஸ்ட்ரெல்னிக் தெரிவித்துள்ளார். இந்த நகரில் இன்னும் 15 ஆயிரம் பேர் வரையில் இருப்பதாக நம்பப்படுகிறது.
கிழக்கு உக்ரைன் நிலைமை
கிழக்கு உக்ரைனைப் பொறுத்தமட்டில் டான்பாசில் ரஷிய தாக்குதல் தொடர்கிறது.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, கடந்த ஒரு நாளில் 6 நகரங்கள் மற்றும் கிராமங்களை ரஷிய படைகளிடம் இருந்து உக்ரைன் படைகள் மீட்டெடுத்துள்ளன என தெரிவித்துள்ளார்.
மரியுபோல் நகரில் அஜோவ் உருக்காலையை இன்னும் ரஷிய படைகளால் வீழ்த்த முடியாத சூழல்தான் உள்ளது.
அஜோவ் பகுதி படையின் துணைத்தளபதி ஸ்வியாடோஸ்லாவ் இதுபற்றி கூறும்போது, வெடிமருந்துகள், உணவு, தண்ணீர், மருந்து பற்றாக்குறை நிலவினாலும், தங்களால் முடிந்தவரை உக்ரைன் படை வீரர்கள் தாக்குபிடிப்பார்கள் என தெரிவித்தார்.
போர் எப்போது முடியும்?
இந்த போர் ஆகஸ்டு மத்தியில் ஒரு திருப்புமுனையை எட்டும், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவு அடையும் என உக்ரைன் ராணுவ உளவுத்துறை தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ரஷிய அதிபர் புதினை அகற்ற சதி நடக்கிறது. அவரும் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டார்.
இதற்கிடையே போருக்கு பின்னர் முதல் முறையாக ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்குவுடன் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைனில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.