

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷியாவில் நேற்று 2-ம் உலகப் போரின் வெற்றி தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதின், “உக்ரைன் போர் விவகாரம் முடிவுக்கு வருகிறது என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
அப்போது, “ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாரா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, முன்னாள் ஜெர்மனி அதிபர் தனக்கு விருப்பமான நபர் என புதின் பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “ஈரான் தொடர்பான மோதலும் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். அவ்வாறு நடைபெறாவிட்டால் அனைவரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். ஈரான்-அமெரிக்கா இடையேயான பிரச்சினை மிகவும் சிக்கலானது. இது எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளுகிறது. ஏனெனில் ஈரானுடனும், பாரசீக வளைகுடா நாடுகளுடனும் ரஷியா நல்லுறவை கொண்டுள்ளது” என்றார்.
மேலும், “ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்கிறது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இடமாற்றம் செய்யவும், பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் ரஷியா உதவ தயாராக உள்ளது” என்றும் புதின் தெரிவித்தார்.