

காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தலீபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில், ஆப்கானிஸ்தானில் ஹெராட் நகரில் அமைந்துள்ள ஐ.நா. வளாகத்தின் முக்கிய பகுதி மீது பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதில், ஆப்கானிஸ்தானிய நாட்டு பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த பிற அதிகாரிகளும் காயமடைந்தனர். எனினும் இந்த தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள் யாரும் காயம் அடையவில்லை.
இந்நிலையில் ஐ.நா. சபை வளாகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.