

நியூயார்க்,
இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் என்று அங்கீகரித்து, அதற்கான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் வாஷிங்டனில் வெளியிட்டார்.
இது பல்லாண்டு கால அமெரிக்காவின் கொள்கைக்கு மாறான அறிவிப்பாக அமைந்துள்ளது. ஜெருசலேம் நகரின் நிலைப்பாடு குறித்து இஸ்ரேலும், பாலஸ்தீனமும் கடைசியாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இதுவரை இருந்த நிலைப்பாடு ஆகும்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப், உடனடியாக டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
எனது இந்த முடிவை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கை என்று கருதி விட முடியாது. அதே நேரத்தில் இந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கு வழிகாட்டவும் இந்த நடவடிக்கை உதவியாக அமையும். இஸ்ரேல், பாலஸ்தீன மோதலில் இரு நாடுகளும் தீர்வு கண்டால் அதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
முக்கியத்துவம் வாய்ந்த நகர்
ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வரும் நிலையில், கிழக்கு ஜெருசலேமை தமது எதிர்கால தலைநகர் என பாலஸ்தீனர்கள் கருதுகின்றனர்.
கிழக்கு ஜெருசலேம் நகர் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத புனித தலங்கள் அமைந்துள்ள பகுதி என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உலக நாடுகள் கண்டனம்
ஆனால் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவரது அறிவிப்பை நிராகரித்தும் அவை கருத்து வெளியிட்டுள்ளன.
சவுதி அரேபியா, டிரம்பின் அறிவிப்பு ஏற்க முடியாதது, பொறுப்பற்றது என சாடியது.
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, டிரம்பின் அறிவிப்பை ஒப்புக்கொள்ள மாட்டேன். அந்த பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்துவதற்கு இது உதவாது என்று நாங்கள் நம்புகிறோம். இங்கிலாந்தின் தூதரகம், டெல் அவிவ் நகரில்தான் தொடரும் என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை டிரம்ப் அங்கீகரித்ததை ஏற்க முடியாது, இந்த அறிவிப்பு மிகுந்த கவலையை அளிக்கிறது. அரேபியர்கள், முஸ்லிம்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய அரபு அமீரகம் கூறி உள்ளது.
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், நாங்கள் அமெரிக்காவின் நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கிறோம் என்பதை உலகமெங்கும் உள்ள முஸ்லிம்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோரும் டிரம்பின் முடிவு ஏற்கத்தக்கதுஅல்ல என்று கூறி உள்ளனர்.
ஐ.நா. சபையும் டிரம்ப் அறிவிப்பை அங்கீகரிக்கவில்லை.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் விடுத்துள்ள அறிக்கையில், ஜெருசலேம் இறுதியில் பேச வேண்டிய பிரச்சினை. இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு தரப்பும் பேசி முடிவு எடுக்க வேண்டிய ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று கூடுகிறது
இந்த நிலையில் ஜெருசலேம் விவகாரம் குறித்து விவாதிக்க நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று (வெள்ளிக்கிழமை) அவசரமாக கூடுகிறது. 15 உறுப்பு நாடுகளில் 8 உறுப்பு நாடுகள் விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில் இந்த கூட்டம் நடக்கிறது.
இதில் டிரம்ப் அறிவிப்பால் எழுந்துள்ள சூழ்நிலை, அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும்.
இதற்கிடையே அரபு நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நாளை (சனிக் கிழமை) இது குறித்து விவாதிக்க உள்ளன.